சென்னை காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர், 33 வயதான லோகநாதன். காசிமேடு மீன் பிடி துறைமுக காவல் நிலையத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவருக்கும் 48 வயதான மாலதி என்பவருக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து, இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். சம்பவத்தன்று, லோகநாதனும் மாலதியும் தனியாக இருந்த நிலையில், ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று லோகநாதன் மற்றும் அவரது கள்ளக்காதலி மாலதி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் மாலதி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாலதியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், லோகநாதனின் சடலத்தை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தேசியா என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், லோகநாதனுக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்ட நிலையில், தேசியாவின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பார்களா என்ற கோணத்தில் காசிமேடு மீன் பிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.