சென்னை திருவல்லிக்கேணி அருகே கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர், பல குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். அதேசமயம், காவல்துறை தேர்வுக்கும் தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால், தனுஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 29) நள்ளிரவு வீட்டின் அருகே நண்பர்களுடன் தனுஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, தனுஷை வெட்டிப் படுகொலை செய்துள்ளது. இதை தடுக்க வந்த தனுஷின் நண்பர் அருணையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
இந்த சம்பவத்தில் தனுஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், தனுஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த அருண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணங்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். குத்துச்சண்டை வீரர் படுகொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை சம்பவம் குறித்து மோகன், செந்தில், டேவிட், விஷால் உட்பட 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.