அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரம் செய்ய பதிவு செய்யப்படும் என்று சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது. மூல ஆவணங்களின் நகல் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள நகல் ஆவணத்தை பார்த்து பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர்களுக்கு கூடுதல் ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பதிவுத்துறை போலி ஆவணங்களை தடுப்பதற்கான பல சட்ட திட்டங்களை வகுத்து பல மாற்றங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு பதிவு சட்டப்பிரிவு 55(A) மூலம் கடந்த 2022ம் ஆண்டு முதல் அசல் ஆவணங்களின்றி பதிவு செய்யக் கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. மேலும், தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில், ஆன்லைனில் பதிவை மேற்கொள்ளும் பொதுமக்கள், அதற்குண்டான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது.
பதிவு சட்டப்பிரிவு 55(A) விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக, அசல் ஆவணங்களை தவறவிட்ட பொதுமக்கள் தங்களது சொத்துகளை பதிவு செய்ய இயலாத நிலைக்கு ஆளாகின்றனர். எனவே இந்த விதிகளை திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், ரியல் எஸ்டேட் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த விதிகளில் திருத்தம் செய்ய உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்நிலையில் அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப் பதிவு செய்யப்படும் என்று சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது என சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரம் செய்ய பதிவு செய்யப்படும் என்று சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது. மூல ஆவணங்களின் நகல் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள நகல் ஆவணத்தை பார்த்து பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர்களுக்கு கூடுதல் ஐஜி உத்தரவிட்டுள்ளார்.