அரியலூரில் அமைந்துள்ள ஶ்ரீ ஆலந்துறையார் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. பழு என்றால் ஆலமரம். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் திருப்பழுவூர் என பெயர் பெற்றது.
தல வரலாறு : கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர்.
அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன், என்றார். அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும்.
கோயில் அமைப்பு : மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு பரசுராமர் இக்கோயிலில் சயனத்தில் அமர்ந்திருப்பது போலவும், விநாயகர் நடனம் ஆடுவது போலவும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி 18 ஆம் தேதியன்று மட்டுமே சூரியன் தன் கதிர்களால் சிவலிங்கத்தை வழிபட்டு செல்கிறது என்பது இக்கோயிலின் சிறப்பாக இருந்து வருகிறது.
இதன்படி ஆலந்துரையார் திருக்கோயிலில் அமைந்துள்ள பரசுராம தீர்த்தத்தில் செவ்வாய், வெள்ளியன்று நீராடி சிவனை மனம் உருக வேண்டி பரசுராமருக்கு பரிகாரம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். மேலும் பிரிந்துள்ள கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.