பவுர்ணமியையொட்டி பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; பவுர்ணமியையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வார இறுதிநாள் விடுமுறையையொட்டி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14, 15-ம் தேதிகளில் 545 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 51 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் என 616 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வார இறுதியில் பயணிக்க 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.