மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகனான இளமாறன் (18). இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். மதுரை புது விளாங்குடி கணபதி நகர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியபடி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
செமஸ்டர் தேர்வுக்கான பணம் கட்ட முடியாத சூழலில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ள மாணவன் இளமாறன் இன்று மதியம் திடீரென வீட்டில் ஆள் இல்லாத போது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளமாறனின் பாட்டி கதவை தட்டி திறக்காத நிலையில் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது இளமாறன் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் காவல்துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடல் புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கூடல் புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினரின் விசாரணையில் முதற்கட்ட தகவலின் செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியாதது காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்த நிலையில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரையில் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மும்பை – அமராவதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது லாரி மோதி விபத்து… பயணிகளின் நிலை என்ன..?