தங்கம் விலை இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இடையிடையே விலை குறைந்தாலும் அதிக நாட்கள் விலை உயர்ந்தே வந்தது. இதனால், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு நகைபிரியர்களை அதிர வைத்து வருகிறது.
இதிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய வரி விதிப்புகளால் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதலீட்டாளர்களால், பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்பட்டு, அனைவரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை ஏப்.09 ஆம் தேதி முதல் தடாலடியாக உயரத்தொடங்கியது. தங்கம் விலை கடந்த 9 ஆம் தேதியில் இருந்து ஜெட் வேகத்தில் மீண்டும் பயணிக்க தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.8,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.