சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது.. டெல்லியில் அடுத்த மாதம் 9.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி பரவுகிறது. அந்த செய்தியில் “ ஏப்ரல் முதல் வாரத்தில் தேசிய தலைநகர் டெல்லியில் 9.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த வாரம் டெல்லி-என்சிஆர் உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளில் 6.6 ரிக்டர் அளவிலான வலுவான நடுக்கம் ஏற்பட்ட நிலையில் வேகமாக பரவி வரும் இந்த செய்தியால் மக்கள் பீதியடைந்தனர்..
இருப்பினும், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், Times Verified மூலம் நடத்திய உண்மைச் சரிபார்ப்பில் அந்தச் செய்தி போலியானது என்பது தெரியவந்தது. Times Verified என்பது நிருபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகராட்சி மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவாகும்.
முன்னதாக கடந்த 21-ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதன் எதிரொலியாக டெல்லி-என்சிஆர் உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10.20 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டதால், பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே ஜம்மு பிராந்தியத்தின் சில பகுதிகளில் மொபைல் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது. 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசாபாத்திலிருந்து 133 கிமீ தென்கிழக்கே தாக்கியது. நிலநடுக்கம் 156 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.