ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார்.
மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?
பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம். திரு. ஸ்டாலின் அவர்களே “உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?” என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா?
இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா? ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



