ஆன்லைன் வங்கி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை (.com அல்லது .co.in) மாற்றி, இனி .bank.in என்ற புதிய டொமைன் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி விதித்த கெடுவின்படி, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் தங்களுடைய இன்டர்நெட் பேங்கிங் தளங்களின் டொமைன் பெயரை .bank.in என்பதற்கு மாற்ற வேண்டும். இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், பிஷிங் (Phishing) மற்றும் போலியான இணையதள மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாத்து, அவர்கள் நம்பகமான வங்கி இணையதளங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகும். கெடு முடிந்துவிட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் இனி அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பயன்படுத்தும்போது, இந்த புதிய .bank.in முகவரியை உறுதி செய்த பின்னரே லாகின் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீப வருடங்களில், மோசடிக்காரர்கள் உண்மையான வங்கி இணையதளத்தின் URL-ஐ போலவே இருக்கும் போலியான முகவரிகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களின் வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடிப் பொருளாதார மோசடிகளை நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவே புதிய .bank.in டொமைன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டொமைன், ரிசர்வ் வங்கி மூலமாக ஒழுங்கமைக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது, நம்பகமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே இந்த டொமைனைப் பதிவு செய்து பயன்படுத்த முடியும். இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் டொமைன்களைவிட அதிகப் பாதுகாப்பானது எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஆன்லைன் வங்கி மோசடிகளைக் குறைத்து, வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யும்போது அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதே RBI-ன் இலக்காகும்.
ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, 2025 நிதியாண்டில் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அதில் சம்பந்தப்பட்ட மொத்தத் தொகையின் அளவு கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை டிஜிட்டல் பரிமாற்றங்களுடன் தொடர்புடையவையாகும்.



