இந்திய பேட்மிண்டன் இளம் நட்சத்திரம் ஆயுஷ் ஷெட்டி, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 49 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எவருமே செய்யாத ஒரு பிரம்மாண்ட வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி அரங்கில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான சீனாவின் ஷி யு கியை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி அதிரடி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மறுமுறையாக அமைந்த இந்த சுவாரஸ்யமான போட்டியில், தரவரிசையில் இடம் பெறாத ஆயுஷ் ஷெட்டி முதல் செட்டை 21-14 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை 13-21 என ஷி யு கி கைப்பற்ற, வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது செட்டில் பரபரப்பு உச்சத்தை எட்டியது. நான்கு மேட்ச் பாயிண்டுகளை தவறவிட்டபோதிலும், மன உறுதியை தளரவிடாத ஆயுஷ் 21-19 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று வரலாற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
கடந்த 49 ஆண்டுகளில் 30 பதிப்புகளாக நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஒருவரை முதல் சுற்றிலேயே தொடரிலிருந்து வெளியேற்றிய முதல் வீரர் என்ற உலக சாதனையை ஆயுஷ் பெற்றுள்ளார். இதற்கு முன் 1977-இல் சாம்பியன் பட்டம் வென்ற பிளெமிங் டெல்ஃப்ஸ், அடுத்த தொடரில் 2-வது சுற்றில் வெளியேறியதே ஒரு நடப்பு சாம்பியனின் மோசமான செயல்பாடாக இருந்தது.
உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து, நடப்பு சாம்பியன் ஒருவர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறுவது இது 4-வது முறை மட்டுமே ஆகும். ஒற்றையர் பிரிவில் இது 2-வது நிகழ்வு ஆகும்.
2021-இல் சிங்கப்பூரின் லோ கியான் இயூ, அப்போதைய முதல் நிலை வீரரான விக்டர் அக்சல்சனை முதல் சுற்றில் வீழ்த்தியிருந்தார். இருப்பினும், அப்போதைய நடப்பு சாம்பியனான கென்டோ மோமோட்டா காயம் காரணமாக விலகியதால் அக்சல்சன் 2-வது தரவரிசையிலேயே இருந்தார். எனவே, முதல் நிலை மற்றும் நடப்பு சாம்பியன் ஆகிய இரு தகுதிகளுடனும் களம் கண்ட ஒருவரை முதல் சுற்றில் வீழ்த்திய முதல் வீரர் ஆயுஷ் ஷெட்டி மட்டுமே.
2026-ஆம் ஆண்டில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ், மலேசியா ஓபன் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என மூன்று முறை ஷி யு கியிடம் தோல்வியடைந்திருந்த ஆயுஷ் ஷெட்டி, அவரை முதன்முறையாக தற்போது வீழ்த்தியுள்ளார்.
மேலும், நடப்பு உலக முதலிட வீரரை ஆயுஷ் வீழ்த்துவது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிங்போவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்னை (Kunlavut Vitidsarn) வீழ்த்தி, 61 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் ஆயுஷ் ஷெட்டி படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



