பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்; தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில எதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகை அனைத்துப் பயனாளர்களுக்கும், குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) செய்வதற்கு. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அவ்வாறாக மாணவர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் கட்டாய பயோமெட்ரிக் விவரங்களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை பெறவேண்டியது அவசியமானதாகும்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்கள், 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களுள் 5 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள். முதன்முறை கட்டாய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்தல் வேண்டும். 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது முறை கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பயின்றுவரும் 5 முதல் 7 வயதுக்குட்பட்ட சுமார் 8 இலட்சம் மாணவர்களுக்கும், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 15 இலட்சம் மாணவ மாணவியருக்கு கட்டாய பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையானது பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே முகாம் அமைத்து அஞ்சல் சேமிப்பு கணக்கு துவங்கும் பணிகளை கடந்த ஆண்டு முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இத்துடன் சேர்த்து மாணவ மாணவிகளுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியினை மேற்கொள்வது எளிதானது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையானது ஆதார் கட்டாய பயோமெட்ரிக் (VDA புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளது.
அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் பட்டியலிடப்பட்டு, அஞ்சலகப் பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணி மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள். இப்பணியானது ஆகஸ்டு 2025-இல் துவங்கி டிசம்பர் 2025-க்குள் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கத் திட்டம் வகுத்துள்ளனர். இதன் மூலம் 6-7, 15-17 வயதிற்குட்பட்ட ஏறத்தாழ 15 இலட்சம் மாணவர்களின் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் விவரம் புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .