பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து 63 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதாரிபூர் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இந்த கொடூர விபத்தில் 19 பேர் பலியாகியிருப்பதாகவும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல் துறை 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து புதியதாக அமைக்கப்பட்டிருந்த விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாகன ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் நாட்டில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. வாகனங்களை சரியாக பராமரிக்காததும் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையாலும் பெரும்பாலான விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகில் சாலை விபத்துகளால் அதிக மக்கள் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் பங்களாதேஷ் முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 9951 பேர் சாலை விபத்துகளில் மட்டும் பலியாகி இருக்கின்றனர் என்று பங்களாதேஷின் பயணிகள் நல வாரிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.