மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்ததால் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சீர்காழியில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு அரசு அலுவலகங்களும் இருப்பதால் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு இது ஒரு மையமாக விளங்கி வருகிறது. சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் சோழா இன் என்ற தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து திருமணத்திற்காக வந்த ஒரு குடும்பத்தினர் அந்த விடுதியில் மூன்று அறைகளை முன்பதிவு செய்து இருக்கின்றனர். முதலில் வந்த ஒரு தந்தையும் மகனும் இரண்டு அறைகளை எடுத்துக் கொண்டு தாமதமாக வரும் உறவினர்களுக்கு ஒரு அறையை ஒதுக்கியுள்ளனர். அதற்கான சாவியையும் ஹோட்டல் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர்.
இவர்கள் நிகழ்ச்சிக்கு சென்று விட தாமதமாக வந்தவர்கள் அறையின் சாவியை கேட்டபோது உறவினர்கள் சாவியை வாங்கி சென்றதாக தெரிவித்த ஹோட்டல் ஊழியர் வேறு ஒரு அறையில் பெண்கள் உடை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறார். அந்த அறைக்கு பெண்கள் சென்ற போது சிசிடிவி கேமராக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தங்கள் உறவினர்களிடம் தெரிவிக்க திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நபர்கள் வந்து இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் வரவேற்புரையிலிருந்த டிவி உட்பட பொருட்களை உடைத்து தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஹோட்டல் நிர்வாகத்தினரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.