உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் 32 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஆர்யா நகர் பகுதியைச் சார்ந்தவர் வன்சிகா. இவருக்கும் அப்பகுதியைச் சார்ந்த நரேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் கணவனை பிரிந்த வன்சிகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ள நரேஷ் அவரது மனைவி வன்சிகாவை தன்னுடன் வாழ வருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு வன்சிகா மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் அங்கிருந்த கத்திரியை எடுத்து வன்சிகாவின் வயிற்றில் வேகமாக குத்தியுள்ளார். குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார் நரேஷ். ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்த வன்சிகாவை மீட்ட பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் நரேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தப்பியோடிய நரேஷை கைது செய்த போலீஸ் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில் தன் மனைவியை தன்னுடன் வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் மறுத்ததால் ஆத்திரத்தில் இப்படி செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் தன் மனைவியை கொல்ல வேண்டும் என்ற திட்டமிடல் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகவே தான் இவ்வாறு செய்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் நரேஷ். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.