எங்களது கோரிக்கைகளை டிரம்ப் ஏற்கவில்லை என்றால் 2029 வரை ஹார்மூஸ் நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, முக்கிய கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை (ஜனவரி 20, 2029) அமெரிக்க நிர்வாகத்துடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர் மஜித் ஷாகேரி கூறுகையில், அதிபர் டிரம்ப் ஈரானுடன் எந்த உடன்பாட்டிற்கும் வரப்போவதில்லை. எனவே, அவரது பதவிக்காலம் முடியும் வரை ஈரானின் தற்போதைய அணுகுமுறையையே தொடரும். போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலையை வெற்றி வரை கையாள்வதே ஈரானின் வியூகமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை பகிரங்கமாக ஒப்புக்கொள்வது தவறானது என்றும், ஈரான் ‘மூலோபாய பொறுமையை’ கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், அமெரிக்காவுடன் தற்போது நேரடியாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளார். முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மீறியதற்காக அமெரிக்கா ஈரானுக்கு 300 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இந்த மீறல்களுக்கு அமெரிக்கா ஈடுசெய்யும் வரை பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்கும் வரை, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என ஈரானிய புரட்சிகரப் படை எச்சரித்துள்ளது. இது குறித்துப் புரட்சிகரப் படையின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி தெரிவிக்கையில், எதிரி நமது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்கும் வரை இந்த ஜலசந்தியை மூடி வைப்பதே நமது தற்போதைய வியூகம். இந்தச் கடல்வழிப் பாதை இனி வெறும் நீர்வழிப்பாதை அல்ல, அது எங்களுக்கு ஒரு போர்க்களம் எனக் கூறியுள்ளார். அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதவரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


