விழுப்புரத்தில் விவாகரத்தான மனைவி மீது முன்னாள் கணவர் பட்டப்பகலில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீச்சில் பெண் மற்றும் சாலையில் சென்ற முதியவர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய முன்னாள் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் – அன்புராணி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்துக்குப் பிறகு அன்புராணி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், குழந்தைகளைப் பார்ப்பது தொடர்பாக ராமச்சந்திரன் அடிக்கடி அன்புராணியின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும், செல்போன் மூலம் அவரைத் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று அன்புராணி விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ராமச்சந்திரன், தான் கொண்டு வந்த ஆசிட்டை அன்புராணியின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அன்புராணி மட்டுமின்றி, அந்த வழியாகச் சென்ற கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவருக்கும் ஆசிட் பட்டதில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகர போலீஸார், இருவரையும் மீட்டு அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விழுப்புரம் நகர போலீஸார், சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். விவாகரத்து பெற்ற மனைவி மீது முன்னாள் கணவர் பட்டப்பகலில் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மனைவியிடம் மீண்டும் கேட்ட அந்த விஷயம்… ஆத்திரத்தில் கத்தியால் தாக்கிய கணவர்!



