இன்று வறண்டு கிடக்கும் உலகின் மிகப்பெரிய சகாரா பாலைவன பகுதியில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவின் 5 பெரும் ஏரிகளை விட பிரம்மாண்டமான நன்னீர் ஏரி ஒன்று பரந்து விரிந்திருந்ததாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 3.61 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் கம்பீரமாகக் காட்சியளித்த அந்தப் பிரம்மாண்ட ‘மெகா-சாட்’ (Mega-Chad) ஏரி, காலப்போக்கில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களால் சுருங்கி, தற்போது ஆப்பிரிக்காவின் சாட், நைஜர், நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளின் எல்லையில் ஒரு சிறிய ‘சாட் ஏரி’யாக மட்டுமே எஞ்சியுள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, நவீன காலக்கணிப்பு தொழில்நுட்பத்தைப் (OSL) பயன்படுத்தி இந்த ஏரியின் புவியியல் வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்ற இந்த ஏரி, பூமியின் சுழற்சி மாற்றங்களால் ஏற்பட்ட தீவிர பருவமழை காரணமாக, 11,500 ஆண்டுகளுக்கு முன்பு தனது உச்சபட்ச பரப்பளவை எட்டியது. அக்காலகட்டத்தில் ஆறுகளும், ஏரிகளும், பசுமையான தாவரங்களுமாக செழித்துக் காணப்பட்ட வட ஆப்பிரிக்கப் பகுதி, சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தீவிர காலநிலை மாற்றத்தால் வறட்சியடைந்து வற்றத் தொடங்கியது.
பண்டைய ‘மெகா-சாட்’ ஏரி இயற்கை மாற்றங்களால் பல ஆயிரம் ஆண்டுகளில் சுருங்கிய நிலையில், நவீன ‘சாட் ஏரி’ மனிதர்களின் கண்மூடித்தனமான பயன்பாட்டினாலும் இன்றைய தீவிர புவி வெப்பமயமாதலினாலும் மிகக் குறுகிய காலத்தில் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 1963-ஆம் ஆண்டில் 26,000 சதுர கிலோமீட்டராக இருந்த இந்த ஏரியின் பரப்பளவு, தற்போது 90 சதவீதத்திற்கும் மேல் வறண்டு வெறும் 1,500 சதுர கிலோமீட்டருக்கும் கீழ் சுருங்கிப்போயுள்ளது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில்களுக்காக இந்த ஏரியின் நீர்வளத்தை மட்டுமே நம்பி வாழும் சாட் படுகைப் பகுதியின் 4 கோடிக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இதனால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலக அளவில் இயற்கை வளங்களின் சீரழிவையும், காலநிலை மாற்றத்தின் கோர முகத்தையும் உணர்த்தும் அபாயகரமான எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.



