வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியோர்களை கருணையின்றி அடித்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரால் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில்கருணை இல்லம் செயல்பட்டு வருகின்றது.இதில் முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் , முறையாக உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் அந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் , முதியவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை என்பதும் அவர்களை துன்புறுத்தியதும் உறுதியானது. எனவே அவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் அந்த இல்லத்தை பூட்டி சீல்வைக்கவும் மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.
முதியவர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்று கருணை இல்லத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.