சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை கடந்து சென்றால் அல்லது மோதினால் ஆபத்தானதாக இருக்கலாம்..

எனவே, இந்த அச்சுறுத்தல்களை சரியான நேரத்தில் சமாளிக்க, நாசா விண்கற்களின் இயக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில், ஒரு நகரத்தை அழிக்கும் அளவுக்குப் பெரிய விண்கல் நாளை பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாசா “ ‘2023 DZ2 எனப் பெயரிடப்பட்டுள்ள புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் ஒன்று சனிக்கிழமை 100K+ மைல்களுக்கு அப்பால் பூமியைக் கடந்து செல்லும். இந்த அளவு கொண்ட ஒரு விண்கல் ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மட்டுமே பூமியை கடக்கிறது, இது அறிவியலுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது’ என்று தெரிவித்துள்ளது.
சுமார் 300 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் சனிக்கிழமையன்று நிலவில் இருந்து 320,000 மைல்கள் (515,000 கிலோமீட்டர்) கடந்து செல்லும்… எனினும் இந்த விண்கல் பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.