தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆளுநர் செய்தது அவை மரபு மீறிய செயல் என்று பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. விசிக, மார்க்சிஸ்ட் ஆகியவை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.