பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. ஃபைசியா பாத் நகரிலிருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அதிர்வில் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி பாகிஸ்தானில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நில அதிர்வுக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 186 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தின் போது பாகிஸ்தானை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்திலும் எந்தவித பதட்டமுமின்றி செய்தி வாசித்துக் கொண்டிருந்த சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வில் அவர் செய்தி வாசிக்கும் அரங்கம் மற்றும் அதிலிருக்கும் உபகரணங்கள் எல்லாம் அதிர்வது தெளிவாக தெரிகிறது. ஆயினும் அந்த நபர் பதட்டமின்றி தனது செய்தியை வாசித்துக் கொண்டே இருக்கிறார். இந்த செய்தி வாசிப்பாளர் பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சியான பாஷ்டோ டிவி சேனல் மஹ்ஷ்ரிக் டிவியில் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்தில் பலர் அவரை பாராட்டியும் பலர் விமர்சித்தும் வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். அதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வுகளும் நிலநடுக்கமும் உணரப்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .