விஜய் பரப்புரை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டார்.
இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்ட நிலையில், தற்போது 43 நிபந்தனைகளோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை காலை 11.00 மணி முதல் மாலை 1.00 மணி வரை நடைபெற 43 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள், தொண்டர்கள் வெகுநேரத்திற்கு முன்பு வருவதை தவிர்த்து குறிப்பிட்ட நேரத்தில் வருவதையும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள். முதியவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்க்கும் விதமாக, முன்னரே தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படவேண்டும் என நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வு அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என பள்ளி நிர்வாகம் அறிவிப்பு.



