திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகவும் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து ஒட்டுமொத்தமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே திமுக ஆட்சி குறித்து ஆளுநரிடம் புகார் வழங்கப்படும் என்று அதிமுக தலைமை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இன்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் எல்லோரும் ஒன்றிணைந்து அங்கிருந்து சின்னமலை தாலுக்கா அலுவலக சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி செல்கின்றனர். இதனை அடுத்து, முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு வழங்க உள்ளனர்.
இந்த பேரணியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி போன்ற பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.