டெல்லியில் கடந்த ஆண்டு ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலன் அப்தாப் கொடூரமான முறையில் கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரத்தாவின் தலையை வெட்டி வீட்டில் உள்ள பிரிட்ஜில் வைத்து, துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக நறுமணப் பொருட்களை பயன்படுத்தியுள்ளார். இந்த கொடூர கொலை வழக்கில் காதலன் அப்தாபை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் இருந்து பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் 6500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஸ்ரத்தாவுக்கும் அப்தாப்புக்கும் இடையே அதிக அளவில் சண்டை நடந்ததாகவும், அதிக அளவு பணம் அப்தாப் கேட்டதாலும் கொலை நடந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் அப்தாப் வீசி உள்ளார். அப்தாப் தாஜ் ஹோட்டலில் பயிற்சி பெற்ற ஒரு கைதேர்ந்த சமையல் கலைஞர். ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு தரையை சுத்தம் செய்வதற்கு ஐஸ் மற்றும் உலர்ந்த ரசாயனங்களை பயன்படுத்தியுள்ளார். ஸ்ரத்தாவை கொலை செய்த ஒரு வாரத்தில் அப்தாப் வேறொரு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். ஸ்ரத்தாவுக்கு கொடுத்த மோதிரத்தை அப்தாப் தன்னுடைய புதிய காதலிக்கு பரிசாக கொடுத்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அப்தாப் கல்வி படிக்க விரும்புவதாகவும் அதற்காக தன்னுடைய கல்வி சான்றிதழ்களை பெறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோர்ட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.