பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மனைவி செல்வராணி (45). இவர், அரியலூர் காந்தி மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி கொளஞ்சி (46). இவர் திருமணத்திற்கு பெண் பார்க்கும் புரோக்கராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராணியிடம் இருந்து கொளஞ்சி ₹1 லட்சம் பணத்தை வட்டிக்கு கடனாகப் பெற்றுள்ளார். ஆனால், குறிப்பிட்ட காலம் கடந்தும் கொளஞ்சி பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. பலமுறை செல்வராணி பணத்தை கேட்டுப் பார்த்தும் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், இன்று (செப். 20) அரியலூர் காந்தி மார்க்கெட்டில் உள்ள சுகுணா சிக்கன் கடை அருகே செல்வராணி காய்கறி வாங்க வந்தபோது, அங்கு வந்த கொளஞ்சியை தற்செயலாக் கண்டுள்ளார். அப்போது, “கொடுத்த பணத்தை எப்போது திருப்பித் தருவாய்?” என செல்வராணி கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த கொளஞ்சி, செல்வராணியின் இடதுபுற காதில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் செல்வராணியின் காதில் இருந்த கம்மல் அறுபட்டு, காது கிழிந்து ரத்தம் கொட்டியது. மேலும், அருகில் இருந்த கறிக்கடையில் இருந்த கத்தியை எடுத்த கொளஞ்சி, “மீண்டும் என்னிடம் வந்து பணம் கேட்டால் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இச்சம்பவத்தில் காது கிழிந்து படுகாயமடைந்த செல்வராணியை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மார்க்கெட் பகுதியில் பெண்கள் இடையே நடந்த கைகலப்பு சம்பவம் அரியலூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமா..? என்ன செய்ய வேண்டும்..? அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி..!!



