மூன்று மாணவிகள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாக சென்றதால் ஒரு பெண் போக்குவரத்து காவலர் அவர்களை இடைமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் முக்கிய சாலையில், ஸ்கூட்டரில் வேகமாகவும், சட்டவிரோதமான முறையில் மூன்று பேர் ஒரே வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து காவலராக பணியாற்றும் பிரணிதா முஸனே என்ற பெண் காவலர் அவர்களை தடுத்து நிறுத்தி, கடுமையாக மிரட்டி அவர்களை தள்ளி, கன்னத்தில் அறைந்துள்ளார்.
சம்பவத்தின்போது காவலர் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதோடு, மாணவிகள் மன்னிப்புக் கேட்டப் பிறகும் பெண் காவலர் மாணவிகளை தாக்குவதை நிறுத்தவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்த நபர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளின் நடத்தை குறித்த கேள்விகள் எழுந்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு, பொது இடங்களில் சட்டத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அடிப்படை மரியாதை இருக்க வேண்டுமென்ற வலியுறுத்தல்களும் உருவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது லாதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், அதே சமயம் மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்களின் மரியாதையும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.