திருநங்கையாக மாறிய மாணவி தான் படித்த பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் பலியான சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள நாஸ்வில்லே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன்பு கையில் துப்பாக்கையுடன் இந்த பள்ளிக்குள் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். இந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் நாஸ்வில்லே பகுதியைச் சார்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் தான் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் இவர் அந்தப் பள்ளியில் பயின்ற மாணவி தான் என்றும் இவர் திருநங்கையாக மாறியவர் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கொடூர துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் மற்றும் மூன்று பெரியவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சியை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் சாவகாசமாக பள்ளிக்குள் நுழையும் பெண் நுழைவாயிலின் கண்ணாடி கதவை துப்பாக்கியால் சுட்டு பின்னர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று தாக்குதல் நடத்தி இருப்பது அந்த காணொளி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆயுத தடை சட்டத்தை நாடாளுமன்றத்தில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். என்னதான் அமெரிக்கா முன்னேறிய நாடாக இருந்தாலும் இது போன்ற மனிதத் தன்மையற்ற கொடூரமான தாக்குதல்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.