ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு திருமணம், விவாகரத்து மற்றும் குழந்தை திருமணம் தொடர்பான புதிய குடும்பச் சட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டம் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் ஊடகம் தெரிவித்த தகவலின்படி, “கணவன்–மனைவி பிரிவதற்கான கோட்பாடுகள்” என்ற பெயரில் 31 பிரிவுகள் கொண்ட இந்த சட்டம், தலிபான் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதலுடன் மே மாதத்தில் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் குழந்தை திருமணம், விவாகரத்து, காணாமல் போன கணவர்கள், மதத்துறப்பு மற்றும் விபச்சார குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல குடும்ப மற்றும் மத சட்டங்களை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறைகளில், பருவமடைந்த பிறகு ஒரு “கன்னிப் பெண்ணின் மௌனம்” திருமணத்திற்கு சம்மதமாக கருதப்படலாம் என்ற விதி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சிறுவன் அல்லது ஏற்கனவே திருமணமான பெண்ணின் மௌனம் சம்மதமாக கருதப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை திருமணங்கள் தொடர்பாக தந்தை அல்லது தாத்தாவைத் தவிர பிற உறவினர்கள் ஏற்பாடு செய்தால், அது சமூக ரீதியாக பொருத்தமானதாகவும் வரதட்சணை சரியானதாகவும் இருந்தால் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் எனவும் விதிமுறை கூறுகிறது. இதன்படி, குழந்தைகள் பருவமடைந்த பிறகு திருமணத்தை ரத்து செய்ய கோரலாம். ஆனால் அந்த கோரிக்கை தலிபான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விபச்சார குற்றச்சாட்டு, மதமாற்றம், நீண்டகால கணவர் பிரிவு போன்ற வழக்குகளில் தலிபான் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில வழக்குகளில் பிரிவினை, சிறைத்தண்டனை அல்லது தண்டனை விதிக்கவும் நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக விதிக்கும் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.



