PPF, NSC போன்ற சிறுசேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதுவரை ஆதார்-பான் கார்டு இணைக்கவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக வருமான வரி செலுத்துவோர் உட்பட பான் – ஆதார் கார்டை வைத்திருக்கும் அனைவரும் இரண்டையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாகவே கூறிக்கொண்டு வருகிறது. அப்படி இணைக்கவில்லையெனில் பல சேவை முடக்கங்களை அரசு செயல்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்தநிலையில், PPF, NSC அல்லது SCSS போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் ஆதார் அட்டை மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அப்படி இணைக்காவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் என அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
நிதியமைச்சகம் மார்ச் 31, 2023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் ஆகிய இரண்டும் கட்டாயம் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தேவைக்கு இணங்க, ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் தங்களது ஆதார் எண்ணையும் வழங்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை அவர்களின் தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளைகளில் செப்டம்பர் 30, 2023க்குள் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த காலக்கெடுவிற்குள் முதலீட்டாளர்கள் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை PPF, NSC அல்லது SCSS உடன் இணைக்கத் தவறினால், இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் அவர்களின் முதலீடுகள் முடக்கப்படும். மேலும், இதைச் செய்யாவிட்டால், முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் போன்ற பலன்களைப் பெற முடியாது.மேலும், அரசாங்க சேமிப்பு ஊக்குவிப்புச் சட்டத்தின் கீழ், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், முதலீட்டாளர்கள் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
PPF, NSC, SCSS கணக்குகளுடன் ஆதார், பான் இணைக்கப்படவில்லை என்றால் என்ன நடக்கும்? உரிய வட்டி முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது. தனிநபர்கள் தங்கள் பிபிஎஃப் அல்லது சுகன்யா சம்ரித்தி கணக்குகளில் டெபாசிட் செய்வதில் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். முதிர்வுத் தொகை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது.