2019-ல் சீனாவில் இருந்து தொடங்கி, உலகையே அதிரவைத்த கொரோனா வைரஸ், மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் பரவியுள்ள JN.1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இந்தியாவிலும் மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றுக்கு ஆளாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, ஜூன் 6 அன்று மட்டும் நாட்டில் 5,364 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 221 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் நகரில் பணியாற்றி வந்த அவர், காய்ச்சலால் முந்தையம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோதும் பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு முன், இரண்டு வயதானவர்கள் கூட கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போதைய சம்பவம் பலரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், கர்ப்பிணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், இருமல், காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனவும், கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதைக்கு தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம் இல்லை என்றாலும், பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவது நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது.