தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை நியமனம் செய்வது குறித்தும், இருக்கை விவகாரம் குறித்தும் அதிமுகவின் தலைமைக்கு கொரடா எஸ்.பி.வேலுமணி இன்று காலை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை நியமனம் செய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஏற்கனவே சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும் அந்த பரிந்துரையின் மீது சபாநாயகர் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இத்தகைய நிலையில், நேற்று அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.
ஆகவே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்வது குறித்து அதிமுகவின் தலைமை கொறடா எஸ் பி வேலுமணி அவர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். அதேபோல எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. சட்டப்பேரவையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அருகிலேயே இருக்கின்ற இருக்கையில் தான் பன்னீர்செல்வம் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.