ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.தற்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் முறையான சுய-ரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தில் நாளொன்றுக்கு பலமுறை விரலில் ஊசி மூலம் ரத்த மாதிரிகளை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், இந்தப் புதிய சாதனம் ஒவ்வொரு முறையும் ரத்த மாதிரியை சேகரிப்பதற்கு மாறாக நிகழ்நேர ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிவதற்கு உதவுகின்றன.மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள ரத்த சர்க்கரை கண்காணிப்பு சாதனம் ஒரு சில வரையறைகளைக் கொண்டுள்ளதுடன் அதிக செலவு கொண்டதாகவும் உள்ளது. இதன் மூலம் எடுக்கப்படும் ரத்த மாதிரிகளிலிருந்து சர்க்கரை அளைவ அறிந்து கொள்வதற்கு நவீன மொபைல் போன்கள் அல்லது அளவீடுகளை வெளியிடும் திரைகள் கொண்ட சாதனங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கு பதிலாக சர்க்கரை அளவை நிகழ் நேரத்தில் உடனுக்குடன் கண்டறியும் வகையில், இந்தப் புதிய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.இந்த சாதனம் பல்வேறு காப்புரிமைக்கான நடைமுறைகளைப் பின்பற்றி முறைப்படி அங்கீகாரம் பெற்று பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த சாதனம் ரத்த மாதிரியை சேகரித்தபின், மறுபடியும் பயன்படக் கூடிய வகையிலும், குறைந்த சக்தி கொண்ட காட்சித் திரைகளையும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நுண்ணிய ஊசிக்கான தொலைஉணர்வு அமைப்பையும் கொண்டுள்ளது.



