அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பு தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஜே.சி.டி பிரபாகர் மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகளை தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இடைக்கால மனுவை நிராகரித்தார்.
தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உட்பட 4 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். அந்த மேல்முறையீட்டு மனுக்களில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து இருந்த மேல்முறையீட்டு மனு மட்டும் நீதிபதி ஆர் மகாதேவன் முஹம்மது ஷபிக் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனதை விசாரிக்க ஆயத்தமான போது மனோஜ் பாண்டியன், பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஒரு தரப்பில் நாங்களும் மேல்முறையீடு செய்திருக்கிறோம் என்றும், தங்களுடைய மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்பதால் பன்னீர்செல்வம் வழக்குடன் எங்களுடைய வழக்கையும் சேர்த்து மதியமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட நீதிபதிகள் அந்த மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கூறினர். அதன் பிறகு பன்னீர்செல்வம் உட்பட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் ஒன்றாக மார்ச் மாதம் 30 ஆம் தேதியான இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் விதத்தில் பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்குகள் அனைத்தும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.