265 உயிர்களை காவு வாங்கிய அகமதாபாத் விமான விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு மோடியை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1950 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்ட போது லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே இதே தார்மீக அடிப்படையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் நாயுடு ஆகியோர் பதவி விலக வேண்டும். அப்போது தான் நியாயமான சுதந்திரமான விசாரணை நடைபெறும். மோடியும் அவரது சகாக்களும் இதுவரை சுற்றி சுற்றிதான் வருகிறார்கள். இது முதலில் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171, அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. விடுதியில் மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த சோகம் அரங்கேறி உள்ளது. இதனால் விடுதி அறையில் தங்கியிருந்த சில மாணவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 265 உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: பார்க்கும் இடமெல்லாம் மனித உடல்கள் சிதறி கிடந்தது.. நேரில் பார்த்தவர் கதிகலங்கி சொன்ன வார்த்தை..!!