நாடு முழுவதும் பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஏஐ மற்றும் சிடி பாடங்களை பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர்கள் குழுவை சிபிஎஸ்இ அமைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்தே ஏஐ மற்றும் சிடி பாடங்கள் சேர்க்கப்படும். இதன்மூலம் தீவிர சிந்தனை, படைப்பாக்கம், செயற்கை நுண்ணறிவை சரியான நெறிமுறைகளுடன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்க முடியும். இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி, மற்றும் வீடியோக்கள் உட்பட பாடத் திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.
ஏஐ கல்வித் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ இணைந்து செயல்படும். 3-ம் வகுப்பில் இருந்தே ஏஐ பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதால், 21-ம் நூற்றாண்டில் சிக்கல்களுக்கு தீர்வு, ஆராய்ச்சி, கணக்கீட்டு திறன்போன்றவற்றில் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் இத்திட்டம் 2026-27 கல்வி ஆண்டில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



