அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல்.
2. ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும்.
3. அதிமுக உறுப்பினர்களை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல்.
4. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டிகளை விரைந்து அமைத்தல்.
5. அதிமுக-வின் ஐடி விங் நிர்வாகிகள் மீது திமுக அரசின் பொய் வழக்கிற்கு கண்டனம்.
6. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்ததற்கு கண்டனம்.
7. திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்.
8. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
9. தமிழ்நாட்டின் கடன் சுமையை அதிகரித்துள்ள திமுக அரசுக்கு கண்டனம்.
10. விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றிற்கு கண்டனம்.
11. திமுக-வுடன் ரகசிய உறவு வைத்துள்ளவர்களுக்கு தக்க பாடம் புகட்டிட அதிமுக தொண்டர்களுக்கு சூளுரை.
12. நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவேரி-கோதாவரி திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம்.
13. சட்டமன்ற, ஜனநாயக மரபுகளை சீரழிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
14. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை கண்டுகொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம்.
15. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றியை தேடித்தர தொண்டர்களுக்கு அழைப்பு.