அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இன்று பங்கேற்கவிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக அவர் பயணம் செய்து வருகிறார்.
நேற்று குற்றாலத்தில் இருந்து புறப்பட்டு கடையநல்லூரில் பிரச்சாரம் செய்தார். “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. உதவி ஆய்வாளர் ஒருவரை வெட்டி கொலை செய்துள்ளனர். காவல் துறைக்கே இப்படி ஒரு நிலை என்றால் மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது…? போதை நபர்களால் சட்டம் – ஒழுங்கு சீர்கெடுகிறது. எல்லா இடங்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. அதை தடுக்க திராணியற்ற அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. திறமையில்லாத முதல்வரால் தமிழக காவல் துறை செயலிழந்து உள்ளது. அதிகார மையங்கள் காவல்துறையை ஆட்டிப்படைக்கிறது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா…? என போகும் இடங்களில் எல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ராஜபாளையத்தில் இன்று காலை பங்கேற்கவிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு உடல் சோர்வு, தொண்டைவலி உள்ளதாகக் கூறப்படுகிறது. உடல்நலன் கருதி ராஜபாளையத்தில் இன்று காலை பங்கேற்க இருந்த உள் அரங்கு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.