சென்னையைச் சார்ந்த துணை நடிகையின் மகன் அவரது தந்தை மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த மாங்காடு அடிசன் நகர் ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் துணை நடிகை சாந்தி. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இவரது கணவர் பெயர் செல்வராஜ் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். இந்த தம்பதியின் மூத்த மகன் ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் படப்பையில் வசித்து வருகிறார். மகள் பிரியாவிற்கு திருமணமாகி இவர்களது வீட்டு அருகில் வசித்து வந்தார். கடைசி மகனான பிரகாஷ் மட்டும் இவர்களுடன் வசித்து வருகிறார். இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வந்திருக்கிறார்.
தனது மகனுக்கு மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்று இருக்கிறார் சாந்தி. அப்போது அவரது மகள் பிரியா கொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அவரும் அவரது மூத்த மகன் ராஜேஷும் பிரியாவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு கணவரில்லாததால் சந்தேகமடைந்த சாந்தி அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது படுக்கையறையில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் அவர்களது மகன் பிரகாஷ் தான் பிரியா மற்றும் செல்வராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தப்பியோடிய பிரகாஷை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் தான் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மூர்க்கனாக மாறிவிட்டதாகவும் சிறிது காலம் அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடிக்க ஆரம்பித்த அவர் மறுபடியும் மூர்க்கத்தனத்திற்கு சென்றிருக்கிறார். இதனால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க முடிவு செய்து இருக்கின்றனர். இதனை மறைந்திருந்து கேட்டவர் தன்னை பைத்தியமாக நினைக்கிறார்கள் என்ற கோபத்தில் தனது தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு சகோதரியுடன் வாக்குவாதம் செய்து அவரையும் கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் அவரது மருத்துவ ஆவணங்களை பரிசோதனை செய்து வருகின்றனர்.