தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, நவம்பர் 11 ஆம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 9ஆம் தேதி இலங்கைக் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் லேசாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள் தான் கணிக்க முடியும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் 9ஆம் தேதியில் இருந்து அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வருகிற 10ஆம் தேதியை பொறுத்தவரை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் இடியுடன் கூடிய மிதமான மழையும், அதன் பிறகு இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும். நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையானது நவம்பர் 11 ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.