வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தற்போது மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், வரும் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை மேற்கு வங்கம், ஒடிசா, வங்கதேசம் மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட இந்த நாட்களில் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


