ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர், 3 முறை முதல்வர், அதிமுகவின் முக்கிய தலைவர் என ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தர்ம யுத்தம் நடத்திய அவர், துணை முதல்வராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அதிமுகவில் தலைமை குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் வசம் உள்ளனர். இதை தொடர்ந்து ஓபிஎஸ், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை தொடங்கினார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியில் செயல்பட்ட புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் (2016 ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்) இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அவருடன் OPS அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அவை தலைவர் ராமையா, மாவட்ட இணை செயலாளர் பரிமளா உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். அதோடு, திமுக, காங்கிரஸ், அமமுகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் மாற்று கட்சியினர் இணைவது அதிமுக வலிமையை மேலும் அதிகரிக்கும் அரசியல் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.



