மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள மிராஜ் நகரில் கவுரவ் அவலே (35) என்பவர் வசித்து வருகிறார். இவர், கல்லூரியில் படிக்கும்போதே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அப்போது 29 வயதான அப்பெண் காவலராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு பின் தோழியான அந்த பெண் காவலரை கவுரவ் அவலே சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் பழகிவந்துள்ளனர். அப்போது, தன்னை உளவுத்துறை அதிகாரி என்று கூறிய கவுரவ், அந்த பெண் காவலரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். அத்துடன் நெருங்கிப் பழகிய பெண் காவலருடன் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடமிருந்து சுமார் 130 கிராம் தங்கத்தைப் பெற்றதுடன், இருவரும் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவோம் எனக்கூறி பெண் காவலரிடமிருந்து ரூ.47 லட்சத்தையும் கவுரவ் அவலே சுருட்டியுள்ளார். ஒருகட்டத்தில் அவாலேவை பெண் காவலர் உடனான தொடர்பை துண்டிக்கத் தொடங்கினார். அத்துடன் பணத்தையும் தரமறுத்ததுடன் வெளியில் இந்த விஷயத்தைக் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து மும்பையில் உள்ள நாக்பாடா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் கவுரவ் அவலே மீது 376 (பலாத்காரம்), 170 (அரசு ஊழியரைப் போல் நடித்தல்), 420 (ஏமாற்றுதல்) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து தலைமறைவான அவலேயை போலீசார் கைது செய்தனர். பெண் காவலரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.