டெல்லியில் நடைபெற்ற ஜமியத்து உலமா இ ஹிந்த் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் தலைவர் கருத்தால் அந்த மாநாட்டில் சர்ச்சை நிலவியது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜமியத் உலமா இ ஹிந்த் மாநாடு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஜெயின புத்த மதத்தைச் சார்ந்த பல்வேறு மதத் தலைவர்களும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமைக்காக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர்கள் சமூகங்களுக்கு இடையே நிலவ வேண்டிய ஒற்றுமைகளைப் பற்றி உரையாற்றினர். இந்த மாநாட்டில் பல்வேறு சமூகங்களை சார்ந்த ஏராளமான மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இஸ்லாமிய மத தலைவரான மௌலானா அர்ஷத் மதனி என்பவர் இந்துக்கள் புனிதமாக பயன்படுத்தும் சொல்லான ‘ஓம்’ என்ற சொல்லும் இஸ்லாமியர்கள் தங்கள் கடவுளை குறிக்கும் சொல்லான அல்லாஹ் என்ற சொல்லும் ஒன்று என்று பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பேசிய அவர் இஸ்லாமிய மதத்தில் அல்லாஹ்வுக்கு எப்படி உருவமில்லையோ அதேபோல ஓம் என்று சொல்லுக்கும் உருவமில்லை அதுவும் காற்றை போல எல்லா இடத்திலும் இருக்கக்கூடியது இன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் அந்த மாநாட்டில் இருந்த மற்ற தலைவர்கள் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாட்டு மேடையில் இருந்து இறங்கி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதில் கலந்துகொண்ட தலைவர்கள் மதங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தாங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக தெரிவித்தனர்.