அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவில் உள்ள எந்த ஒரு அங்குல நிலத்தையும் எந்த நாடும் பறிக்க முடியாது என்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.. திரிபுரா மாநிலம், அகர்தலாவில்நடந்த வடகிழக்கு பாதுகாப்பு கல்வி மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டார்.. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” நமது இந்தியப் பகுதியைப் பாதுகாக்க நமது ராணுவம் தயாராக உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு அங்குலம் அல்லது
இந்தியாவின் வேறு எந்தப் பகுதியையும் வேறு எந்த நாடும் பறிக்க முடியாது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் முயற்சி இரு நாடுகளுக்கும் பயனளிக்காது என்பதை சீனா புரிந்து கொள்ள வேண்டும்.,” என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லையில் உள்ள நிச்சிந்தாபூரில் உள்ள அகர்தலா-அகௌரா சர்வதேச இரயில் இணைப்பின் பணிகளை அமைச்சர் கிஷன் ரெட்டி பார்வையிட்டார்.. இதனை தொடர்ந்து பேசிய அவர் “ இந்த திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இந்த ஆண்டு திட்டத்தை தொடங்க வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்தார்..
15 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையானது, எல்லையில் உள்ள நிச்சிந்தாபூரில் உள்ள சர்வதேச குடியேற்ற நிலையம் வழியாக பங்களாதேஷின் அகௌராவை இணைக்கும். இத்திட்டம் முடிவடைந்தால், டாக்கா வழியாக அகர்தலா மற்றும் கொல்கத்தா இடையேயான பயண நேரம் 31 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக குறைக்கப்படும்.
ஆங்கிலேயர் காலத்தில் அகௌரா அகர்தலாவுக்கான ரயில் இணைப்பாக இருந்தது, ஆனால் புதிய ரயில் திட்டம் 2010 இல் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவும் வங்காளதேசமும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தத் திட்டம் 2020 இல் முடிவடைய வேண்டும், ஆனால் நிலம் கையகப்படுத்தல் சிக்கல்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..