ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெக்பால் பிரிவில் இந்தியாவிற்கு முதன்முறையாக பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குவின்சி டிசோசா (Quimcy Dsouza), மகளிர் ஒற்றையர் பிரிவில் நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்துள்ளார். ஜப்பானின் யுய்னா சகாமோட்டோவிற்கு (Yuina Sakamoto) எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர் தோல்வியடைந்தார்.
இப்போட்டியின் முதல் செட்டில் 1-5 என பின்தங்கியிருந்த குவின்சி, தனது அபார ஆட்டத்தின் மூலம் 10-10 என சமநிலைக்குக் கொண்டுவந்தார். இருப்பினும், பரபரப்பான தருணத்தில் சாதுரியமாக விளையாடிய ஜப்பான் வீராங்கனை சகாமோட்டோ முதல் செட்டை 12-11 என தன்வசப்படுத்தினார்.
இரண்டாவது செட்டில் குவின்சி சிறப்பான தொடக்கத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியபோதிலும், ஜப்பான் வீராங்கனை மீண்டு வந்து அந்த செட்டையும் 12-11 எனக் கைப்பற்றி, நேர் செட்களில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன் மூலம் குவின்சியின் தனிநபர் பதக்கக் கனவு கலைந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்: முன்னதாக குரூப் லீக் சுற்றில் ஜப்பான் வீராங்கனை சகாமோட்டோவை 2-1 என்ற செட் கணக்கில் குவின்சி தோற்கடித்திருந்தார். ஆனால், மிக முக்கியமான வெண்கலப் பதக்கப் போட்டியில் சகாமோட்டோ அதற்குப் பதிலடி கொடுத்துப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பதக்கம் வெல்லாவிட்டாலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள டெக்பால் விளையாட்டில் குவின்சியின் இந்த அரையிறுதிப் பிரவேசம் மற்றும் 4-வது இடம் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. குரூப் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிய அவர், இந்தோனேசியாவின் இமா சுமையாவிடம் (Ima Sumaya) 1-2 எனத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
பதக்க வேட்டை தொடர்கிறது:
மகளிர் ஒற்றையர் பிரிவு முடிவடைந்தாலும், குவின்சியின் பதக்க வாய்ப்பு முற்றிலும் முடிந்துவிடவில்லை. கலப்பு இரட்டையர் பிரிவில் முகமது அனஸ் இம்ரான் பெக் (Mohammed Anas Imran Beg) உடன் இணைந்து விளையாடும் அவர், ‘ரீபேசேஜ்’ (repechage) சுற்று மூலம் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் வியட்நாமிடம் தோல்வியடைந்தாலும், ரீபேசேஜ் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய ஜோடி தொடர்ந்து பதக்கப் போட்டியில் நீடிக்கிறது.



