அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்தியா–அமெரிக்க உறவுகள் குறித்து உயர்மட்ட நிகழ்ச்சி ஒன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேவேளையில், நிகழ்ச்சியின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் உரையாற்றிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசும்போது டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியதோடு, அவரை தனது “நண்பர்” என்றும், “நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன்” என்றும் கூறியுள்ளார். இந்தியா–அமெரிக்க உறவு மிகவும் வலுவானதாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியா–அமெரிக்க உறவு மிகவும் வலுவானது என்றும், தேவையான நேரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், டிரம்ப்–மோடி உறவு புதியது அல்ல என்றும், இருவருக்கும் இடையிலான நெருக்கமான நட்பு தொடர்ந்து நிலைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான மூலோபாய கூட்டாளிகளில் ஒன்றாக உள்ளது என்றும், இரு நாடுகளும் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட மிகுந்த வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது உரையில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஜனநாயக மதிப்புகள், திறந்த சமூக அமைப்பு மற்றும் சந்தை பொருளாதாரம் போன்ற பொதுவான அடித்தளங்களை பகிர்ந்து கொள்கின்றன என்று கூறினார். மேலும் இரு நாடுகளின் உறவு தற்போது மேலும் பல துறைகளில் விரிவடைந்து வலுப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



