அஞ்சல் துறை மதுரை தெற்கு மண்டலத்தில் உள்ள பதினேழு அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள பதினேழு தபால் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம் இயந்திரங்கள் அஞ்சல்துறையால் நிறுவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடன், பாதுகாப்பான வங்கி சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த ஏடிஎம் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளவும், வங்கி கணக்கின் இருப்பை அறிந்து கொள்ளவும் மற்றும் இதர வங்கி சேவைகளையும் பெற முடியும். மேலும் பிற வங்கிகளின் ஏடிஎம் அட்டைகளை அஞ்சலக ஏடிஎம் மையங்களிலும் பயன்படுத்தலாம். ஏடிஎம் மையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வகைசெய்யப்பட்டுள்ளது.
இது வழக்கமான அலுவலக நேரங்களில் அஞ்சலத்திற்கு வர முடியாத வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான சேவையை வழங்குவதாக உள்ளது.புதிதாக தொடங்கப்பட்ட ஏடிஎம் சேவைகளை தங்களது அன்றாட வங்கித் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



