SBI வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவதாகவும், இது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என்று பலர் இணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஏராளமானவர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை நடத்தி வரும் எஸ்பிஐ வங்கி, பல்வேறு கடன் திட்டங்கள் என பல சலுகைகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து எவ்வித தகவலும் இல்லாமல் ரூ.295 கழிக்கப்படுவதாகவும், இது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என வாடிக்கையாளர்கள் பலர் இணையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், NACH நடைமுறையின் காரணமாக சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் மாதத்தவணை முறையில் எதையாவது வாங்கினால் அந்த EMI விவரங்களை கவனிக்கும் பகுதிதான் NACH. National Automated Clearing House (NACH) என்பதுதான் இதன் முழு விளக்கம். நீங்கள் emi செலுத்த வேண்டிய தொகை, அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருநாள் முன்னதாகவும் உங்கள் வங்கி கணக்கில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி EMI கழிக்கப்பட வேண்டுமென்றால், 4 ஆம் தேதி முதல் அந்தத் தொகை உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.
வங்கியில் நீங்கள் போதுமான இருப்பை பராமரிக்கத் தவறினால், வங்கி ரூ. 250 அபராதம் விதிக்கும். இந்த அபராதத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும் உண்டு. எனவே, 250 ரூபாயில், 18 சதவீதம் என்றால் 45 ரூபாய். மொத்தத் தொகை 250 + 45 = ரூ. 295. எனவே, மாதத் தவணைக்கு செலுத்தப்பட வேண்டிய பணம், உங்கள் வங்கிக் கணக்கில் இல்லையென்பதால், இந்த ரூ. 295 அபராதமாக விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.