ராணுவ தளபதியை விமர்சித்தது தொடர்பான ஆடியோ லீக்கான நிலையில், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசமைப்பு சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன்சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவத் தளபதியை ஷினவத்ரா விமர்சித்துள்ளார். இதுதொடர்பான உரையாடல்கள் கசிந்து நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மே 28ஆம் தேதி கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதம், தற்போதைய தொலைபேசி உரையாடல் எதிரொலியாக பிரதமருக்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது.
மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்தது. இதன் காரணமாக பிரதமர் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே தாய்லாந்து அமைச்சரவை அரசர் வஜிரலாங்கோர்ன் ஒப்புதலின் பேரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஷினவத்ரா கூறுகையில் “பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், ஆயுத மோதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், வீரர்கள் எந்த இழப்பையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன். நான் மற்ற தலைவரிடம் சொல்லுவது, எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.